பொருள் விரிவாக்கம்

டயலொக் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை இணைந்து 'e-Kunu' திட்டத்தை இலங்கை முழுவதும் விரிவாக்கம் செய்கின்றன

2026 ஆகஸ்ட் 05         கொழும்பு

 

R.M. ஜால்தொட்ட, பணிப்பாளர் (அபாயகரமான கழிவு மற்றும் இரசாயன மேலாண்மைப் பிரிவு), மத்திய சுற்றாடல் அதிகாரசபை; திருமதி S. P. பெரியப்பெரும, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (கழிவு மேலாண்மை), மத்திய சுற்றாடல் அதிகாரசபை; அசங்க பிரியதர்ஷன, குழும முதன்மை நிறுவன அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கலாநிதி தம்மிக படபெந்தி,

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் (CEA) இணைந்து தனது மின்-கழிவு மேலாண்மைத் திட்டமான e-Kunu வை இலங்கை முழுவதும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பொறுப்புமிக்க மின்-கழிவு அகற்சியை நாடு முழுவதும் இலகுவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்களுக்கான மின்-கழிவு அகற்றும் வசதிகளை வலுப்படுத்தவும், சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்-கழிவு மேலாண்மையை உறுதிப்படுத்தவும் டயலொக் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இந்நிகழ்வில் கௌரவ சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, கௌரவ சுற்றாடல் பிரதிமைச்சர் திரு. அன்டன் ஜெயகொடி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தவிசாளர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திரு. கபில ராஜபக்ஷ, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (கழிவு மேலாண்மை) திருமதி S. P. பெரியப்பெரும, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும முதன்மை நிறுவன அதிகாரியான அசங்க பிரியதர்ஷன, டயலொக் பிசினஸ் சர்வீசஸின் பிரதானி ஹேமக பாலசூரிய மற்றும் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் அதிவேகமாக அதிகரித்து வரும் கழிவு வகைகளில் மின்-கழிவுகளும் ஒன்றாகும். இவை முறைசாரா வழிகளில் அகற்றப்படும்போது சுற்றாடலுக்கும் பொதுச்சுகாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள e-Kunu திட்டத்தின் மூலம், வீடுகள், வணிக நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தங்களது பயன்பாடற்ற மின்னணுச் சாதனங்களை தீவு முழுவதுமுள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை மையங்களில் (Dialog Customer Care Centres) இலகுவாக ஒப்படைக்க முடியும். சேகரிக்கப்படும் மின்-கழிவுகள் அனைத்தும் உரிமம் பெற்ற கழிவு மேலாண்மைப் பங்காளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, முறையான சுற்றாடல் வழிகாட்டல்களுக்கு அமையச் சுத்திகரிக்கப்பட்டு அழிக்கப்படும்.

இக்கூட்டாண்மையானது, டயலொக்கின் சூழல் பாதுகாப்பு அர்ப்பணிப்பை மேலும் பலப்படுத்துவதுடன், இலங்கையின் தேசிய நிலைபேறான இலக்குகள் மற்றும் தயாரிப்பாளரின் நீட்டிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் (EPR) கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான அரசின் எதிர்கால தொலைநோக்கிற்கும் ஆதரவளிக்கிறது. 2025 ஆம் ஆண்டில், டயலொக் நிறுவனம் 3.74 மெட்ரிக் தொன் பொது மின்-கழிவுகளைச் சேகரித்ததுடன், 668 தொன் உள்நாட்டு மின்-கழிவுகளைப் பொறுப்புடன் மேலாண்மை செய்தது. மேலும், பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட நெட்வொர்க் உபகரணங்கள் அனைத்தையும் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சிப் பங்காளர்கள் மூலம் 100% மறுசுழற்சி செய்துள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் கௌரவ (கலாநிதி) தம்மிக படபெந்தி: "மின்-கழிவுகளைப் பொறுப்புடன் மேலாண்மை செய்வது இலங்கையின் சுற்றாடல் நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய அங்கமாகும். e-Kunu போன்ற முன்னெடுப்புகள் பொறுப்புமிக்க கழிவு அகற்சியைப் பொதுமக்களுக்கு இலகுவாக்குவதுடன், சூழல் பாதுகாப்பை ஊக்குவித்து, நிலையான மற்றும் வட்டப் பொருளாதாரத்தை (circular economy) நோக்கிய நாட்டின் பயணத்திற்கு வழிவகுக்கின்றன," எனக் குறிப்பிட்டார்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தவிசாளர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவிக்கையில்: "மின்-கழிவுகளைச் சரியாக மேலாண்மை செய்ய அரசு, தொழில்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரின் கூட்டான பங்களிப்பு அவசியமாகும். டயலொக் நிறுவனத்துடனான எங்களது இக் கூட்டாண்மை, தேசிய மட்டத்திலான சூழல் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதுடன், தயாரிப்பாளரின் நீட்டிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் (EPR) கட்டமைப்பை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கும் துணையாக அமைகிறது," என்றார்.

இக்கூட்டாண்மை குறித்துப் பேசிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க: "இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பு வளர்ந்து வரும் நிலையில், அதனுடன் இணைந்து நிலைபேறான தன்மையும் (sustainability) முன்னேற வேண்டும். மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடனான இக்கூட்டாண்மையின் மூலம், e-Kunu வழியே மின்-கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுவதற்கான வாய்ப்பை விரிவாக்குவதுடன், சூழல் பாதுகாப்புக்கான எங்களது நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்," என்றார்.

இச்செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, தீவு முழுவதுமுள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை மையங்களில் (Dialog Customer Care Centres) e-Kunu சேகரிப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. e-Kunu முன்னெடுப்பின் ஊடாக, மின்-கழிவுகளைக் குறைத்து, தூய்மையான மற்றும் நிலையான இலங்கையை உருவாக்க ஒன்றிணையுமாறு நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் டயலொக் அழைப்பு விடுக்கிறது. மேலதிக விவரங்களுக்கு https://ekunu.lk/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். .